கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியைச் சேர்ந்தவர் தேஜாஸ்ரீ (19). இவரது காதலன் தீபக் (21). இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேஜாஸ்ரீ மற்றும் தீபக் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையே காரணமாகக் கொண்டு பெண்ணின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய தேஜாஸ்ரீ தனது காதலனை திருமணம் செய்து ஓசூரில் வீடு எடுத்து வசித்து வந்தார். அதை அறிந்த பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு வந்து வழுக்கட்டாயமாக அழைத்துச்சென்றனர்.
இதன் பின்னர் நடந்த சம்பவங்களே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தேஜாஸ்ரீயை தனியிடத்திற்கு அழைத்து சென்று, அவருக்கு மொட்டை அடித்ததுடன், சமூக ரீதியாக அவமானப்படுத்தும் வகையில் பல்வேறு சடங்குகளை செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக கடுமையான சித்ரவதைகள் செய்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருந்த தேஜாஸ்ரீக்கு வலுக்கட்டாயமாக மருந்துகள் கொடுத்து, கருச்சிதைவு செய்ததாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்து தீபக்கின் வீட்டிற்கு சென்ற அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுக்கும் தனது காதலனுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



