இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குற்றசாட்டுகளை முன்வைத்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு திமுக ஆதவுடன் அதிமுக ஆட்சி அமைத்து முதலமைச்சராக இபிஎஸ் திட்டம் இட்டார் என்றும், இபிஎஸ் முடிவை கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ந்து போனோம் எனவும் கூறினார். இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை எனக் கூறிய அவர், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதிமுகவில் எந்தவித உட்கட்சிப் பிளவும் இல்லை என்றும், கட்சி ஒன்றுபட்டே செயல்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் 47 சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், அவரே சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “47 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் முறைப்படி சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மையல்ல. கட்சி ஒற்றுமையாகவே உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “அதிகார பதவி மற்றும் அமைச்சர் பதவிகளின் மீதான ஆசையால்தான் சிலர் மாற்றுக் கருத்துகளை பேசி வருகின்றனர்” என்று மறைமுகமாக விமர்சித்தார்.
திமுக – அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் தகவல்களையும் ஓ.எஸ்.மணியன் மறுத்தார். “திமுகவுடன் எந்த கூட்டணியும் இல்லை. நாளை சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு எதிராகவே அதிமுக வாக்களிக்கும்” என்று தெளிவுபடுத்தினார். அதேநேரத்தில், கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவை மீறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், சட்டப்பேரவை கொறடாவை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக கட்சித் தலைமைக்கே உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



