தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் தொடங்கியது. சட்டசபை கூட்டம் கூடியதும் முதலமைச்சர் விஜய் தனது அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தின.
முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்து பதிவும் வாக்கெடுப்பு நடைமுறைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ காமராஜ் சட்டசபையில் பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது. அவர் பேசுகையில், “நேற்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். இன்றும் ஆதரவு தெரிவிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் என் ஆதரவு விஜய்க்கே இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், “நாட்டு மக்களை காப்பாற்ற வந்திருக்கும் தவெக தலைவர் விஜய் என்னை காப்பாற்றாமல் விட்டுவிடுவாரா? முதலமைச்சர் விஜய் என்னை பாதுகாக்க வேண்டும்” என்றும் கூறினார். அதோடு, “முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற 4 நாட்களிலேயே திருச்சியில் உள்ள ரவுடிகள் பலரும் சரணடைந்து விட்டனர்” எனவும் காமராஜ் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், காமராஜ் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு உறுதியாகும் சூழலில், இந்த ஆதரவு தவெக அரசுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.



