தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் நேரடியாகக் களமிறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். காரைக்குடி தொகுதியில் வேட்பாளராக சீமான் களம் இறங்குகிறார்.
காரைக்குடியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், “இதே மண்ணில் ஐயா சிதம்பரத்திற்காக ‘கை’ சின்னத்தில் வாக்கு கேட்டு, ‘உதயசூரியன்’ போட்ட வீட்டு வாசலில் ‘கை’ சின்னத்தை வரைந்து பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டவன் நான். அன்று கை சின்னத்திற்காக உழைத்த அதே நான் தான், இன்று அந்தச் சின்னத்தையே ஒழிக்க வேண்டும் என்று நிற்கிறேன் என்றார். தொடர்ந்து திமுக அரசை சாடிய சீமான், “ஸ்டாலின் வெல்லட்டும்.. நாடு சுடுகாடாகட்டும்” எனச் சாபமிடும் தொனியில் பேசினார்.
முன்னதாக, காரைக்குடி அழகப்பர் நடையாளர் சங்க உறுப்பினர்களைச் சந்தித்த சீமான், அவர்களுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு தனது ‘மைக்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்களை சந்தித்து பேசிய அவர், திமுக ஆட்சியில் நிறைய ஊழல் இருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும். ஒரு மாற்றம் வர வேண்டும். மாற்று அரசியலுக்காக தனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.



