அதிமுகவில் நீடித்து வரும் உள்கட்சி மோதல் தற்போது கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலேயே வெளிப்படையாக பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, “நமது அம்மா” நாளிதழ் மற்றும் “நியூஸ் ஜெ” தொலைக்காட்சி ஆகியவற்றில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான செய்திகள் வெளியாகத் தொடங்கியிருப்பது கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கருதப்பட்ட “நமது அம்மா” நாளிதழின் செய்தி போக்கு திடீரென மாறியிருப்பதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். கடந்த சில நாட்கள் வரை இபிஎஸ் ஆதரவு செய்திகள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகும் பதிப்புகளில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சிக்கும் செய்திகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
இதன் பின்னணியில் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பகுதி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி வேலுமணி – சி.வி. சண்முகம் அணிக்குத் துணையாகவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தாக்கமே கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, “நமது அம்மா” நாளிதழின் முகப்புப் பக்கத்தில் இன்னும் “நிறுவனர் – எடப்பாடி கே. பழனிசாமி” என்ற பெயர் இடம்பெற்று வந்தாலும், உள்ளடக்கங்களில் அவருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்திருப்பது கவனிக்கப்படுகிறது. இது நிர்வாக கட்டுப்பாடு மற்றும் ஊடக செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
அதேபோல், “நியூஸ் ஜெ” தொலைக்காட்சியிலும் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பிற்கு ஆதரவான விவாதங்கள் மற்றும் செய்திகள் அதிகம் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. கட்சியின் சொந்த ஊடகங்களே தலைமைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது இபிஎஸ் தரப்புக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனால், அதிமுகவில் உருவாகியுள்ள அதிகாரப் போட்டி தற்போது ஊடக கட்டுப்பாடு வரை சென்றுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி சேனலிலேயே பொதுச்செயலாளருக்கு எதிரான செய்திகள் வெளியாகும் நிலை ஏற்பட்டிருப்பது தமிழக அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
Read more: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இளைஞர் பலி.. படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்..?



