சென்னையில் போதைப்பொருள் விற்பனை, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை நேற்று இரவு அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. நகரின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையில் மொத்தம் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகர காவல்துறையின் உத்தரவின் பேரில், தி.நகர், அடையாறு மற்றும் புளியந்தோப்பு காவல் மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்தவர்கள், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர்கள் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறையினர் முன்கூட்டியே சேகரித்த தகவல்களின் அடிப்படையில் பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதில் தி.நகர் காவல் மாவட்டத்தில் மட்டும் 18 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அடையாறு காவல் மாவட்டத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புளியந்தோப்பு பகுதியில் 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் சிலரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக சென்னையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் ரவுடி செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் வரும் நாட்களிலும் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



