தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்துள்ளார்.. தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் புறப்பட்ட முதல்வர் விஜய் இன்று மதியம் டெல்லி சென்றடைந்தார்..
டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.. அந்த மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்..
இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்திக்கிறார்.. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி உடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.. இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை, பி.எம்.ஸ்ரீ திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்த விரிவான மனுவை முதல்வர் விஜய் பிரதமரிடம் வழங்க உள்ளார்.. இதை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாரமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்..
இன்றிரவு டெல்லியில் தங்கும் முதல்வர் விஜய் நாளை காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை சந்திக்க உள்ளார்.. அதன்பின்னர் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.. இந்த சந்திப்பு முடிந்ததும் நாளை முதல்வர் விஜய் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது..



