சென்னை கோடம்பாக்கத்தில் தனது உறவினர் வீட்டுக்கு வந்த 16 வயது சிறுவனுக்கு காவலர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.. சென்னை வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் வேலப்பன், கோடம்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு மது அருந்த சென்றுள்ளார்.. அப்போது மது போதையில் தனது நண்பரின் உறவினரான 16 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றியதுடன், பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. இந்த புகாரின் பேரில் வேலைப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜய் தலைமையிலான தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை, மிகுந்த அச்சமூட்டுகிறது.
முதல்வர் அவர்களே, எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்கான கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது. வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா?
சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : தவெகவில் இணைகிறேனா..? இறுதி முடிவு இதுதான்..! முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி..!



