பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் ஒருமுறை நல்ல நண்பர் என்று குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.. இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கக் குழுவின் 4 நாள் இந்தியப் பயணம் முடிவடைந்த மறுநாளே அவரது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கடந்த காலத்தில் இந்தியா, அமெரிக்காவின் கொள்கைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, “மிக அதிக அளவிலான வரிகளை” (tariffs) விதித்ததாகக் குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளதாகவும், அமெரிக்கா இந்தியாவுடனான வர்த்தகத்தில் “அதிக வருவாய் ஈட்டி வருவதாகவும்” அவர் கூறினார்.
மேலும் “அவர்கள் எங்கள் நிறுவனங்கள் மீது மிகப்பெரிய அளவிலான வரிகளை விதித்தனர், ஆனால் நாங்கள் அவர்கள் மீது எதையும் விதிக்கவில்லை. இப்போது நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது.. நாங்கள் இந்தியாவுடன் அதிக வருவாய் ஈட்டுகிறோம். நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவோம், ஏனென்றால் உங்கள் பிரதமரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனது நல்ல நண்பர். எங்களுக்கிடையே நல்லுறவு உள்ளது, நாங்கள் நிச்சயம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்வோம்.” என்று தெரிவித்தார்..
பிப்ரவரி 7 அன்று பிரதமர் மோடியும் டிரம்ப்பும் தொலைபேசியில் உரையாடினர்; அதைத் தொடர்ந்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) முதல் கட்டத்திற்கான கட்டமைப்பை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்தன. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை நீக்குவதும், மீதமுள்ள வரிகளை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதும் இதில் முன்மொழியப்பட்டது.
ஆனால், டிரம்பின் ‘பரஸ்பர வரிகள்’ (reciprocal tariffs) கொள்கைக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 20 அன்று நிலைமை மாறியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 24 முதல் 150 நாட்களுக்கு அனைத்து நாடுகள் மீதும் 10 சதவீத வரியை அமெரிக்கத் தலைவர் விதித்தார்.
இருப்பினும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தின. இதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் மாதத்தில் வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமையிலான இந்தியக் குழு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்றது. பின்னர், ஜூன் 1 முதல் 4 வரை, பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்கக் குழு இந்தியாவில் இருந்தது.
வர்த்தக ஒப்பந்தம் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் சிறிய விஷயங்கள் குறித்து மட்டுமே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : வெள்ளி விலை குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு.. விரைவில் தாறுமாறாக உயரப் போகுது..!



