புகைபிடிப்பின் ஆபத்துகள் குறித்து பல ஆண்டுகளாக பொது சுகாதார அமைப்புகள் எச்சரித்து வந்த நிலையில், தற்போது நிபுணர்கள் “மௌன அச்சுறுத்தல்” எனக் குறிப்பிடப்படும் மற்றொரு அபாயத்தை முன்வைத்து வருகின்றனர். அது நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருக்கும் பழக்கம். நவீன வாழ்க்கை முறையில், அலுவலகப் பணிகள், ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மக்கள் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை உட்கார்ந்தபடியே நேரத்தை கழித்து வருவது கவலைக்கிடமானதாக உள்ளது.
The Conversation இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நிபுணர்கள் கூறுகையில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது Heart Disease, Type 2 Diabetes மற்றும் முன்கூட்டிய மரணம் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த பழக்கம் வெளிப்படையாக பாதிப்பில்லாததாக தோன்றினாலும், அதன் தாக்கம் உடலின் பல அமைப்புகளிலும் மெதுவாக வெளிப்படுகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாரம்பரியமாக, உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுமுறை ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்று கூறப்பட்டு வந்தாலும், அது மட்டும் போதுமானதல்ல என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஒருவர் தினசரி உடற்பயிற்சி செய்தாலும், நாள் முழுவதும் பெரும்பகுதியை உட்கார்ந்தபடியே கழித்தால், உடல்நல அபாயங்களை முழுமையாக தவிர்க்க முடியாது என்பதே தற்போதைய ஆய்வுகளின் முக்கிய முடிவாகும்.
உடல் நீண்ட நேரம் அசைவின்றி இருக்கும் போது, தசை செயல்பாடு குறைவதுடன், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு சீர்குலைகிறது. இதன் விளைவாக இன்சுலின் எதிர்ப்பு நிலை உருவாகி, பின்னர் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதேபோல், இரத்த ஓட்டம் குறைவதால் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலின் பல பகுதிகளுக்கு சரியாக சென்றடையாது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது தசை மற்றும் எலும்பு அமைப்புகளையும் பாதிக்கிறது. குறிப்பாக கழுத்து, தோள்பட்டை மற்றும் கீழ் முதுகு பகுதிகளில் வலி மற்றும் இறுக்கம் ஏற்படுவது பொதுவாகக் காணப்படுகிறது. பல அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து சோர்வு, கவனச்சிதறல் மற்றும் உற்பத்தித்திறன் குறைவு போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பொது சுகாதார நிபுணர்கள் கூறுவதாவது, இந்த அபாயங்களைத் தவிர்க்க பெரிய மாற்றங்கள் தேவையில்லை. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சில நிமிடங்கள் எழுந்து நடப்பது, நின்றபடியே வேலை செய்வது, அல்லது சிறிய உடற்பயிற்சி இடைவேளைகளை எடுத்துக்கொள்வது போன்ற எளிய நடைமுறைகள் உடல்நலத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக, பணியிடங்களில் நின்று வேலை செய்யும் மேசைகள் மற்றும் நடந்துகொண்டே கூட்டங்கள் நடத்துவது போன்ற முறைகள் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Read more: ரூ. 2500 முதலீடு செய்தால் ரூ. 8 லட்சம் கிடைக்கும்.. SBI-ன் இந்த அசத்தலான திட்டம் பற்றி தெரியுமா?



