குடும்பத் தகராறு காரணமாக ஊர் பெரியவர்கள் முன்னிலையிலேயே, கணவர் ஒருவர் தனது மனைவிக்கு செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான ராஜேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு 24 வயதான சுஷ்மிதா என்ற மனைவி உள்ளார். சுஷ்மிதா, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, மாடக்கல் ஊராட்சியைச் சேர்ந்த மல்லிகைபாய் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், தற்போது இவர்களுக்கு 2 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
அடிக்கடி, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம்போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவமடைந்த சுஷ்மிதா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ராஜேஷ், அவரது தந்தை கோவிந்தப்பா, தாயார் கெம்பம்மா மற்றும் அவர்களது ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் சுமார் 30 பேர் சுஷ்மிதாவை சமாதானம் பேசி அழைத்து வர சென்றுள்ளனர்.
சுஷ்மிதாவின் வீட்டின் முன்பு, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. அப்போது மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுஷ்மிதாவின் கழுத்தில் ஆவேசமாகக் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார். ஊர் பொதுமக்கள் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சரிந்த சுஷ்மிதா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ராஜேஷ், கர்நாடகாவில் உள்ள கோடள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, கர்நாடகப் போலீசார் தமிழகத்தின் தளி காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் கொடுத்து, கொலையாளி ராஜேஷை அவர்களிடம் ஒப்படைத்தனர். ராஜேஷை கைது செய்த தளி போலீசார், சுஷ்மிதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஊர் பெரியவர்கள் முன்னிலையிலேயே பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மூட்டு வலி என்ன? எல்லா வலியும் பறந்துரும்! அதுக்கு முதல்ல இத பண்ணுங்க…



