சமீப காலமாக திருமணத்திற்கு புறம்பான உறவுகள் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இத்தகைய உறவுகள் காரணமாக குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் போன்ற துயரமான நிகழ்வுகளும் பதிவாகி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் குடும்ப உறவுகளின் நிலைத்தன்மை மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளன.
சீர்காழி தாலுக்கா, ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் கனிவண்ணன். கடந்த 2020-ஆம் ஆண்டு இவர் கவிப்பிரியா என்ற பெண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, தற்போது 6 மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நுண்கடன் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவருக்கும் கவிப்பிரியாவிற்கும் திருமணத்திற்கு முன்பே பழக்கம் இருந்துள்ளது. இவர்களின் பழக்கம் கவிப்பிரியாவின் திருமணத்திற்குப் பிறகு கள்ளத்தொடர்பாக நீடித்துள்ளது.
ஒரு கட்டத்தில் இவர்களின் தொடர்பு குறித்து கனிவண்ணனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கவிப்பிரியா தன் குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து சென்றுவிட்டார். தனியாக சென்ற அவர், ஆக்கூர் பாரதி வீதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
அங்கு யாருடைய தொந்தரவும் இல்லாமல், அபினேஷ் அடிக்கடி கவிப்பிரியாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 25 அன்று, கவிப்பிரியாவின் மூன்று வயது இளைய மகன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த அடிபட்டதாகக் கூறி கவிப்பிரியா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூன் 29 அன்று சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சிறுவனின் தந்தை கனிவண்ணன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அக்குடியிருப்புப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, சம்பவம் நடந்த நேரத்தில் அபினேஷ் வீட்டிற்குள் சென்றதற்கான காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்காதலர்கள் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். சம்பவத்தன்று கவிப்பிரியா கீழே தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த 3 வயது குழந்தை தொடர்ந்து அழுது அடம் பிடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ் குழந்தையைக் கொடூரமாகப் பிடித்துக் கீழே தள்ளியுள்ளார்.
இதில் சுவற்றில் தலை மோதி குழந்தைக்குத் தலையின் உட்பகுதியில் பலத்த உள்காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் கவிப்பிரியா, தங்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், அபினேஷுடன் சேர்ந்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடியுள்ளார். இதையடுத்து, இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்ற உத்தரப்படி கவிப்பிரியாவை திருச்சி பெண்கள் சிறையிலும், அபினேஷைக் கடலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர்.
தாயின் கள்ளக்காதளால் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read: “அவ எனக்கு மட்டும் தான் சொந்தம்!” – இன்ஸ்டா காதலிக்காக வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்..



