பெண்கள் நாட்டின் கண்கள் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால், அந்தக் கண்களை நாம் கவனிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக பெண்கள், தனது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி, அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார்கள். ஆனால், அது தனக்கென்று வரும்போது, மிச்சம் மீதிகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்காகவே உழைத்து கடைசி வரை வாழ்ந்து விடுவார்கள். இதனால்தான், பல பெண்கள் இளம் வயதிலேயே வயதான தோற்றத்திற்கு மாறுகிறார்கள். மேலும், அவர்களுக்கு மூட்டுவலி, முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு உடல்வலிகளும் ஏற்படத் தொடங்குகின்றன.
உடலின் உறுதியான அடித்தளமாக விளங்குவது எலும்புகள்தான். எனவே, சிறு வயதிலிருந்தே எலும்புகளை வலிமையாக வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக பெண்கள், வயது அதிகரிக்கத் தொடங்கும் போது எலும்பு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக 30 வயதுக்குப் பிறகு பெண்களின் உடலில் எலும்பு அடர்த்தி படிப்படியாக குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக எலும்பு பலவீனம் மற்றும் முறிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின்படி, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் ஒப்பிடும்போது இந்தியப் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இயற்கையாகவே மெலிந்த அல்லது சிறிய எலும்பு அமைப்பைக் கொண்ட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், மாதவிடாய் சுழற்சியை மட்டுமல்லாமல் எலும்புகளின் வளர்ச்சிக்கும், அவற்றின் வலிமையைப் பராமரிப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. வயது அதிகரித்து மெனோபாஸ் காலம் நெருங்கும் போது இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், எலும்புகளின் அடர்த்தியும் வேகமாக குறையத் தொடங்குகிறது. இந்தியப் பெண்களுக்கு மெனோபாஸ் பல மேற்கத்திய பெண்களை விட சற்று முன்னதாகவே ஏற்படுவதால், எலும்பு ஆரோக்கிய பாதிப்புகளும் இளம் வயதிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது.
உணவுப் பழக்கவழக்கங்களும் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன. கால்சியம் நிறைந்த பால், தயிர் போன்ற பால் சார்ந்த உணவுகளையும், புரதச்சத்து வழங்கும் மீன், முட்டை, இறைச்சி போன்ற உணவுகளையும் பல பெண்கள் போதிய அளவில் எடுத்துக்கொள்வதில்லை. இதனால் எலும்புகளுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து, பலவீனம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், எலும்பு ஆரோக்கியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும் இந்த பிரச்சினையை அதிகரிக்கும் காரணிகளில் ஒன்றாக உள்ளது.
எலும்புகளை நீண்ட காலம் வலிமையாக வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி செய்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது, காலை நேர சூரிய ஒளியைப் பெறுவது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தைத் தவிர்ப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நல்லது. கால்சியம் மாத்திரைகள் அல்லது பிற ஊட்டச்சத்து மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையெனில் மருத்துவரின் பரிந்துரையின்படியே அவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
Also Read: கணவனைக் கட்டிலில் கட்டிவைத்து மனைவி செய்த காரியம்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்!



