மழைக்காலம் தொடங்கியவுடன் இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் காட்சிகளில் ஒன்று மயில் தோகையை விரித்து ஆடுவதுதான். பலரும் மழை பெய்யப்போகிறது என்ற மகிழ்ச்சியால் மயில்கள் நடனமாடுகின்றன என்று நினைத்தாலும், உண்மையில் அதற்கு இயற்கை மற்றும் உயிரியல் சார்ந்த பல காரணங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக பருவமழை தொடங்கும் காலத்தில்தான் மயில்களின் இனப்பெருக்க பருவமும் ஆரம்பமாகிறது. இந்த நேரத்தில் ஆண் மயில்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவற்றின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன. மழையால் உருவாகும் ஈரப்பதமான மற்றும் குளிர்ச்சியான சூழல் இனப்பெருக்கத்திற்கு மிகவும் ஏற்றதாக இருப்பதால், பெண் மயில்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஆண் மயில்கள் தோகையை விரித்து பல்வேறு அசைவுகளுடன் நடனமாடுகின்றன.
மயிலின் தோகையில் உள்ள நூற்றுக்கணக்கான வண்ணமயமான இறகுகள் வெறும் அழகுக்காக மட்டுமல்ல. இணையை ஈர்க்கும் முக்கிய அடையாளமாகவும் அவை செயல்படுகின்றன. தோகையை விரித்தபடி இறகுகளை அதிரவைத்து, தனித்துவமான ஒலிகளை எழுப்பும் ஆண் மயில்களை பெண் மயில்கள் உன்னிப்பாக கவனிக்கின்றன. தோகையின் அளவு, நிறத்தின் பிரகாசம் மற்றும் இறகுகளின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆரோக்கியமான இணையை அவை தேர்வு செய்வதாக விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மயில்கள் குறித்து பல காலமாக சில நம்பிக்கைகளும் பரவி வருகின்றன. குறிப்பாக, மயில் ஆடிய பிறகு கண்ணீர் விடும் என்றும், அந்தக் கண்ணீருக்கும் இனப்பெருக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படும் கருத்துகளுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இணை சேரும் காலத்தில் ஆண் மயில்கள் எழுப்பும் சத்தத்தை சிலர் தவறாக புரிந்துகொண்டதே இந்த நம்பிக்கைக்கு காரணமாகக் கருதப்படுகிறது.
மழைக்காலத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகுவதாலும் மயில்கள் அதிக உற்சாகத்துடன் காணப்படுகின்றன. இதனால் மழை பெய்யும் முன்பும், மழை பெய்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் அவை அடிக்கடி தோகையை விரித்து ஆடுவதை பார்க்க முடிகிறது.
இனப்பெருக்க பருவம் முடிந்த பிறகு மயில்களின் நீண்ட அலங்காரத் தோகைகள் இயற்கையாகவே உதிர்ந்து விடுகின்றன. அதன் பின்னர் புதிய இறகுகள் வளரத் தொடங்கி, அடுத்த மழைக்காலம் வரும்போது மீண்டும் முழுமையான தோகையுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. எனவே, மழைக்காலத்தில் மயில்கள் ஆடுவது வெறும் மழையை வரவேற்கும் நடனம் மட்டுமல்ல; அவற்றின் இயற்கையான இனப்பெருக்கச் செயல்முறையின் முக்கியமான ஒரு பகுதியாகும்.
Also Read: ஆயிரக்கணக்கான பாடல்கள், எண்ணற்ற சாதனைகள்… எஸ். ஜானகியின் சொத்து மதிப்பு பற்றி தெரியுமா?



