திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான சிவரஞ்சினி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் இவர், சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கித் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் சிவரஞ்சினி தனது விடுதி அறையில் தூங்கியுள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், சிவரஞ்சனி கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி கூச்சளிட்டுள்ளார். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பித்துள்ளார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக சிவரஞ்சனி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ராயலா நகர் குற்றப்பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, விடுதி வளாகம் மற்றும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த மர்ம நபர் சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது தனசேகர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் தனசேகரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தனசேகரின் காதலியான 24 வயது ராதிகா என்பவர்தான் இந்தத் திருட்டுக்கு முழு உடந்தையாக இருந்துள்ளார். அவர், விடுதியின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பெண்கள் தூங்கும் நேரத்தைக் கணித்து, தனது காதலனை அனுப்பி நகையைத் திருட வைத்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த காதலி ராதிகாவையும் தனிப்படை போலீசார் ரகசியத் தகவலின் பேரில் கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை மீட்டனர். அதைத் தொடர்ந்து, ராதிகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரைப் புழல் பெண் சிறையில் அடைத்தனர். விடுதியில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: “நான் வியந்து பார்த்த ஒரே ஸ்டார் அவர்தான்…” பிரபல நடிகை குறித்து குஷ்பூ பகிர்ந்த தகவல்..



