ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் லூர்து குமார். இவருக்கு 24 வயதான ரெபேக்கா என்ற மகள் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, ரெபேக்காவிற்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 36 வயதான பாகப்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பாகப்பிரகாஷ், பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், மதுபான பார் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரதீஸ்வரி (4), பிரணிதா (2), பிரகிதா (2) என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த ரெபேக்கா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது 3 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் தனது தாய் வீட்டிற்கு அருகே உள்ள நால்ரோடு பகுதியில் ஒரு வாடகை வீடு எடுத்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக பாகப்பிரகாஷ் தனது மனைவி இருக்கும் வீட்டிற்க்கு சென்றுள்ளார்.
ஆனால், ரெபேக்கா அவருடன் மீண்டும் சென்று வாழ முடியாது என்று என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனிடையே, கடந்த சில நாட்களாகவே ரெபேக்கா யாருடனோ செல்போனில் நீண்ட நேரம் பேசுவதாக , பாகப்பிரகாஷ் சந்தேகப்பட்டார்.. எப்போது மனைவிக்கு போன் செய்தாலும், பிஸி என்று வந்துள்ளது. இதனால் பாகப்பிரிகாஷூக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் வாழவும் வராமல், செல்போனும் பிஸியாகவே இருப்பதால், ஆத்திரமடைந்த பாகப்பிரகாஷ், தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து கத்தியை வாங்கி, அதை மறைத்து எடுத்துக்கொண்டு தனது மனைவி இருக்கும் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அங்கு ரெபேக்காவின் பெற்றோர் மற்றும் தங்கை இருந்துள்ளனர். அவர்களிடமும் தனது குழந்தைகளிடம் அன்பாகப் பேசிய பாகப்பிரிகாஷ், தனது மனைவி அமர்ந்து இருந்த அறைக்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவியிடம் “தயவுசெய்து குடும்பம் நடத்த வா” என மீண்டும் கெஞ்சியுள்ளார். ஆனால் ரெபேக்கா அப்போதும் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாகப்பிரகாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரெபேக்காவை சரமாரியாகக் குத்தியுள்ளார். ரெபேக்காவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ரெபேக்காவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தப்பியோட முயன்ற பாகப்பிரகாஷை பிடித்து பவானிசாகர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரெபேக்காவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் பாகப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். தனது தாய் சடலமாக கிடப்பதை பார்த்து 3 குழந்தைகள் கதறிய காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. மேலும், தை இறந்த நிலையில் தந்தை சிறையில் இருக்க 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.



