தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தப் போவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற இக்கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் கோழி உற்பத்தியாளர்களின் நடைமுறைகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வழக்கமாகச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் கறிகோழிகளுக்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பது முக்கிய நெறிமுறையாகும்.
ஆனால், உற்பத்தியாளர்கள் இந்த விதியைப் பின்பற்றுவதில்லை என்றும், விற்பனை செய்யப்படும் கடைசி நிமிடம் வரை தீவனத்தைக் கொடுத்துக் கோழிகளின் எடையைச் செயற்கையாக உயர்த்துகின்றனர் என்றும் வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இவ்வாறு செரிக்காத தீவனத்துடன் வரும் கோழிகளால் நுகர்வோர் தேவையற்ற கூடுதல் எடைக்கு பணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகிறது. மேலும், ஜீரணமாகாத கழிவுகளால் சுற்றுப்புறச் சூழல் மாசடைவதுடன், இறைச்சியின் இயல்பான தரமும் சுவையும் பெருமளவில் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
எனவே, 15 மணி நேர தீவன நிறுத்த விதியை உற்பத்தியாளர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதையும், இதுகுறித்த தெளிவான வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட மற்றும் மண்டல கால்நடைத் துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஜூலை 31ஆம் தேதி முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் கறிக்கோழி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, சிக்கன் விலை உயரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Read More : ஏசி தண்ணீரை வீணாக கொட்டுறீங்களா? இதோ 7 பயனுள்ள பயன்பாடுகள்!


