திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த ஜூலை 23ஆம் தேதி, 8ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு Good Touch and Bad Touch குறித்த விழிப்புணர்வு வகுப்பை ஆசிரியை ஒருவர் நடத்தியுள்ளார். வகுப்பின் போது, “யாருக்கேனும் இதுபோன்று அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் பயப்படாமல் என்னிடம் தெரிவிக்கலாம்” என்று ஆசிரியை நம்பிக்கை அளித்துள்ளார்.
வகுப்பு முடிவடைந்ததும், 13 வயது சிறுமி ஒருவர் கண்ணீருடன் ஆசிரியையை அணுகி தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, தான் 3ஆம் வகுப்பு படித்தபோது, பள்ளி அருகே தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன் என்பவர் தன்னைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதால், பயத்தில் இத்தனை ஆண்டுகள் யாமிடமும் சொல்லாமல் தவித்து வந்ததாக தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாகச் சிறுமியின் தாயாரை பள்ளிக்கு வரவழைத்து விபரத்தைக் கூறியுள்ளார். தொடர்ந்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கூலித் தொழிலாளி ஐயப்பனைக் கைது செய்தனர். பின்னர் திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Read More : யூடியூபர் இர்பானுக்கு மீண்டும் ஆப்பு..!! பழைய கேஸை தோண்டி எடுத்து அதிரடி உத்தரவு..!!



