தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய பழக்கம் காதலாக மாறிய நிலையில், கணவரை விட்டு காதலருடன் சென்ற பெண், பின்னர் போலீஸ் விசாரணையில் சிக்கிய சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷோபா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரின் விருப்பப்படி குடுபள்ளி மண்டலம், குடிகோத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், குண்டூர் மாவட்டம் கண்ட்ரிகா கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி நாயக் என்பவருடன் தவறுதலாக ஏற்பட்ட தொலைபேசி தொடர்பு, நாளடைவில் நெருக்கமான நட்பாக மாறியது. பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து பேசி வந்த நிலையில், அந்த நட்பு காதலாக மாறியது. இந்த உறவு குறித்து அறிந்த சிரஞ்சீவி, மனைவியிடம் விளக்கம் கேட்டபோது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு ஷோபா வீட்டை விட்டு வெளியேறி, பாலாஜி நாயக்குடன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் ஒரு சிறிய கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனைவி வீட்டை விட்டு சென்றதைத் தொடர்ந்து, சிரஞ்சீவி அருகிலுள்ள காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பின்னர் மேற்கொண்ட முயற்சியில், ஷோபா மற்றும் பாலாஜி நாயக் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து, இருவரையும் காவல்துறையிடம் ஒப்படைத்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஷோபா மிரட்டியதால், அவரது வற்புறுத்தலின் பேரில்தான் திருமணம் செய்து கொண்டேன்” என்று பாலாஜி நாயக் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான பெண்ணுக்கும், தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் அறிமுகமான நபருக்கும் இடையே உருவான உறவு, இறுதியில் காவல்துறை விசாரணை வரை சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



