தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்று பலரது கவனத்தையும் ஈர்த்தது. 110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதற்கு உறுப்பினர்கள் தெரிவித்த விதவிதமான கருத்துகள் அவையில் சுவாரஸ்யமான தருணங்களை உருவாக்கின.
அறிவிப்பை வரவேற்று பேசிய மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், பல உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்த வாகனங்கள் இருந்தாலும், முதலமைச்சர் வழங்கும் காரில் தொகுதிக்குள் செல்வது தனக்கு பெருமையாக இருக்கும் எனக் கூறினார். மேலும், மக்கள் பணிக்காக முதலமைச்சர் வழங்கும் வாகனத்தை பயன்படுத்துவதில் தனக்கென ஒரு மகிழ்ச்சியும் பெருமையும் இருப்பதாக தெரிவித்து, விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய எம்எல்ஏ சண்முகன், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன், உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள காரை இன்னோவா மாடலாக வழங்கினால் சிறப்பாக இருக்கும் என சில உறுப்பினர்கள் விரும்புவதாக நகைச்சுவையாக குறிப்பிட்டார். அவரது இந்த கருத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
அதேபோல், தவெக எம்எல்ஏ சிந்து, “கொடுத்ததெல்லாம் கொடுத்தார்… அவர் யாருக்காக கொடுத்தார்.. ஒருத்தருக்காக கொடுத்தார்..ஊருக்காக கொடுத்தார்” என்று எம்ஜிஆரின் பிரபல பாடல் வரிகளை பாடி முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். அவரது பாடலை கேட்ட விஜய் சிரித்தபடி ரசித்தார்.
இதனால், கார் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை விவாதம், உறுப்பினர்களின் நகைச்சுவை கலந்த பேச்சுகளால் கவனம் பெற்றது.
Also Read: சினிமாவில் ஹீரோ.. சொந்த ஊரில் காய்கறி வியாபாரம்! பிரபல நடிகரின் வித்தியாசமான அவதாரம்..



