மனஅழுத்தம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. மகனின் பிடிவாதத்தை சமாதானப்படுத்தச் சென்ற பெற்றோர், அவரைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த முரளிதர் சந்த்குடே மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு 19 வயதில் குணால் என்ற மகன் இருந்தார். குணால் புதிய செல்போன் வாங்கித் தருமாறு பெற்றோரிடம் கேட்டதாகவும், இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த குணால், வெள்ளிக்கிழமை காலை கவ்தா மலையின் உச்சிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அவர் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, குணாலின் தாயார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மலையின் கீழ் பகுதியில் இருந்து அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். சுமார் 3 மணி நேரமாக தொடர்ந்து பேசியும் குணால் தனது முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.
ஒருகட்டத்தில், மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் தந்தை முரளிதர் மலையின் உச்சிக்கு சென்றுள்ளார். அப்போது குணாலை பிடித்து காப்பாற்ற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக முரளிதர் நிலைதடுமாறியுள்ளார். இதில் குணாலும் முரளிதரும் மலையிலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை நேரில் பார்த்த சங்கீதா அதிர்ச்சியடைந்துள்ளார். மகனும் கணவரும் கீழே விழுந்த நிலையில், அவரும் மலையிலிருந்து குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குணால், முரளிதர் மற்றும் சங்கீதா ஆகிய மூவரும் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: இரும்புப் பாத்திரத்தின் ரகசியம்! இதில் சமைத்தால் உணவுகள் அதிக சுவையாக இருக்கும்… காரணம் இதுதான்!



