தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் இனி தனியார் குத்தகை இன்றி, கோவில் நிர்வாகமே நேரடியாக பிரசாதங்களை தயாரித்துப் பக்தர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மற்றும் நடுத்தரக் கோவில்களில் லட்டு, முறுக்கு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பல்வேறு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை இப்பணிகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு வந்த நிலையில், தனியார் விற்பனை செய்யும் பிரசாதங்கள் தரமற்றதாகவும், சுவையின்றி அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் பக்தர்கள் தரப்பிலிருந்து தொடர் புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, பக்தர்களுக்கு தரமான பிரசாதங்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகங்களே நேரடியாகப் பிரசாதங்களை தயாரித்து விற்க அனுமதி வழங்கித் துறை ஆணையர் வினய் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், குறிப்பிட்ட சில கோவில்களில் வழங்கப்படும் தனித்துவமான பிரசாதங்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சிறப்புத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், புதிய திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களுக்கான விலைப் பட்டியலையும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 50 கிராம் லட்டு ₹20, 50 கிராம் தேன்குழல் ₹25, மிளகுவடை, அதிரசம் மற்றும் 150 கிராம் புளியோதரை ஆகியவை தலா ₹20-க்கும், 150 கிராம் சர்க்கரைப் பொங்கல் ₹20, 250 கிராம் பஞ்சாமிர்தம் ₹30, 50 கிராம் அப்பம் ₹20, 80 கிராம் தேன் தினை மாவு ₹15 மற்றும் 100 கிராம் அரவணை ₹50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இப்புதிய நடைமுறைக்கு கோவில் செயல் அலுவலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரும்பாலான கோவில்களில் பிரசாதம் தயாரிக்கப் போதுமான சமையல் கூட வசதிகளோ, இடவசதியோ இல்லை என்றும், அதற்கேற்ற பணியாளர்களை புதிதாக நியமிக்காமல் உடனடியாக இத்திட்டத்தை செயல்படுத்துவது நிர்வாக ரீதியாக பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
Read More : BIG BREAKING | செப்.1ம் தேதி மேட்டூர் அணை திறப்பு..!! தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!



