காவிரி படுகை பாசனத்திற்காக மேட்டூர் அணை செப்.1ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தாமதமானதாலும், கர்நாடக அரசிடமிருந்து உரிய நீர் கிடைக்காததாலும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உரிய தேதியில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் டெல்டா விவசாயிகள் பெரும் கவலையடைந்த நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதாலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையினாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதன் பலனாக அணையின் நீர்மட்டம் 88.84 அடியாகவும், நீர் இருப்பு 51.33 டி.எம்.சி-யாகவும் உயர்ந்துள்ளது.
சட்டப்பேரவையில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் அணை திறப்பு குறித்துச் சூசகமாகத் தெரிவித்திருந்த சூழலில், முதலமைச்சர் விஜய் நேரில் வருகை தந்து அணையை திறந்து வைப்பதற்கான பயணத் திட்டங்களும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இன்று சேலம் மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதி, டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமனி மற்றும் மாவட்ட எஸ்.பி குத்தாலிங்கம் ஆகியோர் மேட்டூர் அணையின் வலது கரைப் பகுதியை நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், காவிரி படுகை பாசனத்திற்காக மேட்டூர் அணையை செப்.1ம் தேதி முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். 45 நாட்களுக்கு அணையின் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து திறப்படும் என தெரிவித்துள்ளார்.


