டெல்லி பவானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது நர்சரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த புகாரில், அதே பள்ளியில் கேப் டிரைவராக பணியாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை சாக்லேட் கொடுத்து ஆசைவார்த்தை கூறி, பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறுமியின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக மாற்றம் ஏற்பட்டதை அவரது தாய் கவனித்துள்ளார். இதையடுத்து, குழந்தையிடம் அன்பாக விசாரித்தபோது, பள்ளியில் இருக்கும் ஒரு “கெட்ட அங்கிள்” தனக்கு சாக்லேட் கொடுப்பதாகவும், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நபரின் பெயரை குழந்தையால் கூற முடியவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 24ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தினர், சிறுமியிடம் பள்ளியில் பணியாற்றும் நபர்களின் புகைப்படங்களையும், கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காண்பித்துள்ளனர். அப்போது, குற்றச்சாட்டுக்கு உள்ளான கேப் டிரைவரை சிறுமி அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்திலேயே இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் கடந்த 8 மாதங்களாக அந்தப் பள்ளியில் கேப் டிரைவராக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. பள்ளி வளாகத்தில் அவர் சாக்லேட்டுகளை வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுமி கழிவறைக்குச் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து சென்று, சாக்லேட் கொடுத்து, படிக்கட்டுக்கு அடியில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட நபரின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்துள்ளனர். அதில், அவர் வேறு சில சிறு குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கும் வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த வீடியோக்களில் இடம்பெற்றுள்ள மற்ற குழந்தைகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர், அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான பள்ளியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணையின் ஒரு பகுதியாக ஆய்வு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறுமியிடம் அவர் வேறு சந்தர்ப்பங்களிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Also Read: மீண்டும் ஓர் பேரதிர்ச்சி! அமெரிக்காவில் திடீர் வெள்ளப்பெருக்கு! 60-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; 20-க்கும் அதிகமானோர் மாயம்!



