மேற்கு ஈரானில் உள்ள சனந்தாஜ் மற்றும் ஹமேடான் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், சனிக்கிழமை நிகழ்ந்த விபத்து காரணமாக எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
டேங்கர் லாரி வெடித்ததில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த பல வாகனங்களுக்கும் பரவி சேதத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சனந்தாஜ் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் அவசரக் கால மீட்புக் குழுவினர் தொடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருபுறம் இந்த விபத்து நடந்த சூழலில், மறுபுறம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இராணுவ மோதல் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க கடற்படையின் 2 போர்க்கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இருப்பினும், அமெரிக்கப் படைகள் அந்த ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தப்பித்த நிலையில், அதற்கு பதிலடியாக ஈரானின் 3 கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தி அவற்றைச் சேதப்படுத்தியுள்ளது.
ஈரான் தனது நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றால், அவர்களின் எண்ணெய் விநியோகக் கட்டமைப்பை முற்றிலும் அழிப்போம் என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



