மாண்டி தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாத விவகாரம், பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பணிகளுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டும், பல திட்டங்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதிகாரிகளின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.
இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டியில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில், தொகுதியில் நடைபெற்று வரும் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கங்கனா ரனாவத் ஆய்வு செய்தார். அப்போது, எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.11 கோடி நிதி எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வியை அதிகாரிகளிடம் முன்வைத்தார்.
பல பணிகள் இரண்டு ஆண்டுகளாகியும் முன்னேறாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய கங்கனா, ஒவ்வொரு கூட்டத்திலும் புதிய காரணங்களையும் விளக்கங்களையும் கேட்க வேண்டிய நிலை தொடர்வதாக அதிருப்தி தெரிவித்தார். இனி விளக்கங்களைக் கேட்கும் நிலையில் தான் இல்லை என்றும், நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடித்து அதன் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.
“ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிறிய வேலையைக் கூட முடிக்கவில்லை என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?” என்ற தொனியில் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய கங்கனா, பணிகள் தாமதமாகும் நிலையில் ஊடகங்களிடம் தனது தொகுதியின் வளர்ச்சியைப் பற்றி தான் பதிலளிக்க வேண்டியுள்ளது என்றும் அதிருப்தி தெரிவித்தார்.
இதன்போது அதிகாரிகளின் பணித்திறனை கடுமையாக விமர்சித்த அவர், “சோம்பேறிகள், தகுதியற்றவர்கள்” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை நேரடியாக சாடினார். பொதுமக்களின் வரிப்பணம் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிலையில், அந்த நிதி உரிய பணிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது அதிகாரிகளின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் திட்டங்கள் ஆவணங்களில் மட்டுமே இடம்பெறாமல், அவற்றின் பலன் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களையும் உண்மையான பயனாளிகளையும் சென்றடைய வேண்டும் என்பதிலும் கங்கனா கவனம் செலுத்தினார். ஒவ்வொரு திட்டத்தின் தரம், நிதி பயன்பாடு மற்றும் பணிகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதிகாரிகளின் செயல்பாடு குறித்து கங்கனா அதிருப்தி தெரிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற DISHA கூட்டத்திலும், வளர்ச்சிப் பணிகளை அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆய்வுப் பணிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தற்போதைய DISHA கூட்டத்தில் அதிகாரிகளின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து கங்கனா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Also Read: “எனக்கு அவன்தான் வேணும்!”… நீதிமன்றம் சென்ற மகள்; நேரில் சென்று தாய் செய்த காரியம்!



