குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த 28 வயது பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான கணவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி வெற்றிச்செல்வி, 28. இந்த தம்பதிக்கு 10 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த இளையராஜா, நான்கு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
வீடு கட்டுவதற்காக வெற்றிச்செல்வி தனது தாய் மூலம் இளையராஜாவுக்கு பணம் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்தப் பணத்துக்கான வட்டியை செலுத்துவதில் குடும்பத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாங்கிய ரூ.3 லட்சத்தை திருப்பித் தருமாறு வெற்றிச்செல்வி கணவரிடம் தொடர்ந்து கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெற்றிச்செல்வி தனது இரு குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதமாக அதர்நத்தத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். திங்கள்கிழமை அதிகாலை அங்கு சென்ற இளையராஜா, மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால், வெற்றிச்செல்வி வர மறுத்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த இளையராஜா கத்தியால் வெற்றிச்செல்வியின் தலை மற்றும் கைகளில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் தொடர்பாக ராமநத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய பின்னர் தலைமறைவான இளையராஜாவை தேடி வருகின்றனர்.
Also Read: தலையணை உறையை அடிக்கடி மாற்றாம பயன்படுத்துறீங்களா?… அதுல எவ்வளவு அழுக்கு சேரும்னு தெரிஞ்சுக்கோங்க!



