தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றம்சாட்டை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தவிர கூடுதல் தொகை பெற்றால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவறுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் மேலாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 18வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றது முதல் போதை மற்றும் மதுபானங்களுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் பதவி ஏற்ற மறுதினமே கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய பொதுமக்கள் கூடும் இடங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். முன்னதாக டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



