சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இளம் பெண் ஒருவரை, வேறு நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து அவரது காதலனே ஹோட்டல் அறையில் கத்திரிக்கோலால் குத்திக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாலினி குரியா (23) என்ற பெண், சென்னையில் இருந்து தனது இரண்டு தோழிகளுடன் ரயிலில் ரங்கியா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர்களை வரவேற்பதற்காக உடால்குரி மாவட்டத்தைச் சேர்ந்த அவரது காதலனான அபிஜித் கிண்டோ (22) அங்கு சென்றுள்ளார். பின்னர், ரங்கியா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக அனைவரும் சென்றுள்ளனர். அபிஜித் தனக்கென தனியாக ஒரு அறையை எடுத்திருந்த போதிலும், நள்ளிரவில் மாலினி தங்கியிருந்த அறைக்குச் சென்று அங்கேயே தங்கியதாக கூறப்படுகிறது.
மறுநாள் காலை, ஹோட்டல் அறையில் மாலினி உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரங்கியா போலீஸார், அதே அறையில் உடற்காயங்களுடன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் இருந்த அபிஜித்தை மீட்டனர். அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னர், போலீஸார் அவரை கொலை வழக்கில் கைது செய்தனர். சம்பவ இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்திரிக்கோல் மற்றும் ஆயுதங்களை தடயவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், மாலினி வேறு ஆண்களுடன் பேசிப் பழகி வந்ததாக அபிஜித்துக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மாலினி ரங்கியா வருவதற்கு முன்பே அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மாலினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் வந்த தோழிகளிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



