தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்தார்.. 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன் தினம் டெல்லி சென்ற விஜய், நேற்று மாலை பிரதமர் மோடியை விஜய் சந்தித்தார்.. இந்த சந்திப்பின் போது தமிழ் தாய் வாழ்த்து, மேகதாது அணை உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை விஜய் பிரதமரிடம் முன்வைத்தார்..
இதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் விஜய் இன்று சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்..
விஜய் நேற்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.. ஆனால் இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.. முதல்வர் அவசரமாக சென்னை திரும்புவதால் காங்கிரஸ் தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
முதலில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துவிட்டு, பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, கார்கே ஆகியோரை சந்திப்பதாக திட்டமிடப்பட்டது.. அதன்படி முதல் நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியையும், 6.30 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் விஜய் சந்தித்தார்.. ஆனால் அமித்ஷா சந்திப்பு நடக்கவில்லை.. இதை தொடர்ந்து அடுத்த நாள், சோனியா, ராகுல், கார்கே ஆகியோர் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது..
காங்கிரஸ் மூத்த தலைவர்களை விஜய் ஏன் சந்திக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. விஜய்யின் டெல்லி பயணத்தின் போது விஜய் மற்றும் ராகுல்காந்தி இருப்பது போன்ற பேனர்கள் டெல்லி முழுவதும் வைக்கப்பட்டிருந்தன.. இதனை பார்த்து கோபமான அமித்ஷா விஜய் உடனான சந்திப்பை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது..
இந்த தகவலை பிரதமர் மோடியிடமும் அமித்ஷா சொன்னாராம்.. அதன்பின்னர் தான் காங்கிரஸ் தலைவர்கள் உடனான சந்திப்பை நடத்தவே கூடாது என்று பாஜக மேலிடம் விஜய்யிடம் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.. அதனால் தான் சோனியா, ராகுல் உடனான சந்திப்பை ரத்து செய்துவிட்டு விஜய் சென்னை திரும்பினாராம்..
ஆனால், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ராகுலை பார்க்க வருவதால் தான் விஜய்யின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார்.. எனினும் உண்மை காரணம் அதுவல்ல எனவும், விஜய் தரப்பே இந்த சந்திப்பை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. டெல்லியின் மிரட்டலுக்கு பயந்து ராகுலின் சந்திப்பை ரத்து செய்திருப்பதாக கூறப்படும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது..



