ஒருகாலத்தில், மக்கள் வீட்டில் சமைத்த உணவுகளையே பெரும்பாலும் சாப்பிட்டு வந்தனர். நீண்ட தூரப் பயணங்களில் அல்லது அவசர நேரங்களில் மட்டுமே வெளியில் உணவு எடுத்துக்கொள்ளப்பட்டது. சைவம், அசைவம் என சில வகை உணவகங்கள் மட்டுமே இருந்த காலம் இன்று முற்றிலும் மாறியுள்ளது.
இப்போது சாண்ட்விச், பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், மஞ்சூரியன், பிரியாணி போன்ற நவீன உணவுகள் மக்கள் வாழ்க்கையில் தினசரி இடம்பிடித்துவிட்டன. ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற ஆன்லைன் தளங்களின் வளர்ச்சியால், வீட்டில் சமைப்பதைவிட வெளியிலிருந்து உணவு ஆர்டர் செய்வது ஒரு வழக்கமாக மாறியுள்ளது.
வெளி உணவுகள் ஏன் இவ்வளவு சுவையாக இருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் அதில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்கள்தான். சோயா சாஸ், மிளகாய் சாஸ், பூண்டு-இஞ்சி விழுது போன்றவற்றுடன், செயற்கை நிறங்கள், சுவை மேம்படுத்திகள் மற்றும் பாதுகாப்பு இரசாயனங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
உடல்நலத்துக்கு ஆபத்தான இரசாயனங்கள்: நிபுணர்கள் கூறுவதன்படி, ஹோட்டல் உணவுகளில் அடிக்கடி காணப்படும் சில இரசாயனங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.
அசிட்டிக் அமிலம் – நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண்கள்
சோடியம் பென்சோயேட் – புற்றுநோய் அபாயம்
சோடியம் மெட்டாபைசல்பைட் – தலைவலி, வைட்டமின் குறைவு
மோனோசோடியம் குளூட்டமேட் (MSG) – பல உடல்நல பிரச்சனைகள்
அதிக சோடியம் – இரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு
செயற்கை நிறங்கள் (E102, E124 போன்றவை) – ஒவ்வாமை, குழந்தைகளில் அதீத சுறுசுறுப்பு
இவ்வகை பொருட்கள் நீண்டகாலம் தொடர்ந்து உட்கொள்ளப்படும்போது, புற்றுநோய், ஆஸ்துமா, ஒவ்வாமை, வயிற்று கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
வீட்டு உணவின் முக்கியதுவம்: இதற்கு மாறாக, வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளில் இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு, இலவங்கப்பட்டை, சோம்பு போன்ற இயற்கைச் சுவை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுவையையும், ஆரோக்கியத்தையும் ஒருங்கே வழங்கும் ‘மருந்து உணவுகள்’ என கருதப்படுகின்றன.
சுவை என்பது ஒரு நிமிட மகிழ்ச்சி மட்டுமே. ஆனால், அதற்காக உடல்நலத்தை ஆபத்துக்கு உள்ளாக்குவது பெரிய பிரச்சனையாக மாறக்கூடும். அதனால், வெளி உணவுகளை குறைத்து, இயற்கையான வீட்டுச் சமையலை அதிகப்படுத்த வேண்டும் என்பது நிபுணர்களின் ஒருமித்த கருத்தாகும்.



