தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை, மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்திய கள்ளக்காதலன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சாலநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (42). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சின்ன கெங்குராஜ் (47) என்பவருடன் குருவலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து, இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து கெங்குராஜின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் குருவலட்சுமியும் தனது கணவரை பிரிந்து கெங்குராஜுடன் வெளியூரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளாக இருவரும் அங்கு ஒன்றாக வாழ்ந்த நிலையில், இந்த விவகாரம் குருவலட்சுமியின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, குருவலட்சுமியை உறவினர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு கெங்குராஜை பிரிந்த அவர், மீண்டும் தனது குழந்தைகளுக்காக கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கத் தொடங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கெங்குராஜ், குருவலட்சுமியை மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி குருவலட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற கெங்குராஜ், தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கெங்குராஜ் குருவலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை குருவலட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தீயில் சிக்கியிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குருவலட்சுமிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இதனிடையே, சம்பவம் தொடர்பாக போலீசார் கெங்குராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குருவலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய திட்டம்… நீட் தேர்வில் அதிரடி மாற்றம்!



