நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு நடைமுறைகளை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீட் தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். குறிப்பாக, வினாத்தாள் கசிவை தடுப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, முதலில் நான்கு வெவ்வேறு வினாத்தாள் தொகுப்புகள் தயாரிக்கப்படும். அவற்றில் தேசிய தேர்வு முகமை இயக்குநர் இரண்டு தொகுப்புகளைத் தேர்வு செய்வார். தேர்வு செய்யப்பட்ட வினாத்தாள்கள் அச்சிடுவதற்காக இரண்டு தனித்தனி அச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வினாத்தாள் தயாரிப்பு மற்றும் அச்சிடும் பணிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் வாய்ப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
மேலும், அச்சிடப்பட்ட வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முழுமையான திருப்தியை வெளிப்படுத்தவில்லை. நீட் தேர்வு நடைமுறைகளை சீரமைப்பதற்காக ராதாகிருஷ்ணன் குழு வழங்கிய பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
Also Read: பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை… கர்ப்பத்தை மறைத்து குழந்தையையும் விற்ற கொடூரம்!



