தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீரர் சந்தோஷ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார் சந்தோஷ். ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பதக்கம் வெல்வது என்பது இதுவே முதன்முறையாகும். 400 மீட்டர் பந்தய தூரத்தை 49.40 வினாடிகளில் கடந்து சந்தோஷ் 3ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதனுடன் ஆசிய கோப்பை தடகள போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியின் 2 ஆம் நாளன்று மட்டும் இந்திய அணிக்கு 3 தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.
மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதியார்ராஜீ 13 புள்ளி 9 நொடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் பந்தயத்தில் முதன் முறையாக இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்று அசத்தினார். ஆடவருக்கான மும்முனைப் போட்டியில் இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டம், ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், டெகத்லான் உள்ளிட்ட பந்தயங்களில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. வரும் 16ஆம் தேதி வரை தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், தற்போது வரை இந்தியாவிற்கு 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.