விழுப்புரம் அருகே, திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கொடூரமாக கொலை செய்ய முயன்ற இளைஞரால் பரபரப்பு.
அதாவது, விழுப்புரம் அருகே இருக்கின்ற பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வெற்றிச்செல்வன் (35) இவர் வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்தார். அதோடு, மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், அதே பகுதியில் இருக்கின்ற கல்லூரியில் ஒரு மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியை வெற்றிச்செல்வன் ஒருதலையாக காதலித்துள்ளார். இதனால், அந்த மாணவி கல்லூரிக்கு செல்லும் போதும், வரும்போதும் வெற்றிசெல்வன் அந்த மாணவிக்கு, தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அந்த மாணவி, வெற்றி செல்வனின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இருந்தாலும், வெற்றிச் செல்வன், தன்னுடைய பெற்றோர்களுடன், மாணவியின் வீட்டிற்கு சென்று, அவரை பெண் கேட்டுள்ளார். ஆனால், தன்னுடைய மகள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆகவே, அவருடைய ஒரு வருட படிப்பு உள்ளது. மேலும், வெற்றிக்கு அதிக வயது இருப்பதால், குறைந்த வயதான தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை என்று அந்த மாணவியின் பெற்றோர் தெரிவித்து விட்டார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றிச்செல்வன், நேற்று மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், வீட்டிற்குள் புகுந்து, மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், மாணவியை அவருடைய துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். இதில் மயக்கம் அடைந்து கீழே சரிந்த மாணவியை உயிரிழந்து விட்டதாக நினைத்து, அங்கேயே விட்டு,விட்டு தப்பி சென்று விட்டார் வெற்றிச்செல்வன்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, வேலைக்கு சென்று இருந்த மாணவியின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மாணவியின் கழுத்து இறுக்கப்பட்டு, வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில், உயிருக்கு போராடிய நிலையில், கிடந்த தன்னுடைய மகளை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். அவரை உடனடியாக மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அனுமதித்தார். அவருக்கு அங்கே தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில், மாணவியின் தந்தை புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு, கல்லூரி மாணவியை கொலை செய்ய முயற்சி செய்து, பின்பு தப்பி சென்று, தலைமறைவாக இருக்கின்ற வெற்றிச்செல்வனை, விழுப்புரம் தாலுக்கா காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.