அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் குழப்பம் ஏற்பட்டு ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என இரண்டு அணிகள் உருவான நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியதோடு அவர்களுக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜூலை 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என தீர்ப்பு வெளியானது .
இந்த தீர்ப்பிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேலும் அதிமுக உரிமை மீட்பு என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பு வெளியானது. மேலும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் .
இந்த கொண்டாட்டங்களின் போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்” அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு உச்ச நீதிமன்றம் தகுந்த தண்டனையை கொடுத்திருக்கிறது. இனி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக என்று சொல்லிக் கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரைவேட்டியையோ கட்சி கொடிகளையோ இரட்டை இலை சின்னம் பொறித்த லெட்டர் பேடுகளையோ பயன்படுத்த முடியாது. தர்மயுத்தம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்தவர்களுக்கு இது மரண அடி” எனவும் தெரிவித்துள்ளார் .
மேலும் இந்த பேட்டியின் போது” தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ஜெயக்குமார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” தமிழக முதலமைச்சரை ரோபோ மன்னன் என விமர்சித்திருக்கிறார். நாட்டில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கும் போது சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடத்துவதாக திமுக அரசு மற்றும் முதலமைச்சரை குற்றம் சாட்டியிருக்கிறார் ஜெயக்குமார். மேலும் அதிமுக கட்சி பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது என்று கூறி வரும் முதல்வர் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கி கூட்டணிக்கு தயாராகி வருகிறது எனவும் சூட்சகமாக” தெரிவித்துள்ளார்.