வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆன முன்னாள் காதலனை, தன்னுடைய உறவினர்கள் மூலமாக காரில் கடத்திச் சென்று, கத்தி முனையில், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட முன்னாள் காதலியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை அருகே உள்ள வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. சென்ற ஜூலை மாதம் மென் பொறியாளரான பிரியா என்ற இளம் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு நடுவே, பார்த்திபன் கல்லூரியில் படித்தபோது, ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சௌந்தர்யா மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட இருவரும், சுமார் ஏழு வருட காலமாக காதலித்து வந்த நிலையில், சௌந்தர்யா உடன் பார்த்திபனுக்கு திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே பார்த்திபனின் பெற்றோர் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.
பெற்றோரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காத பார்த்திபன், சௌந்தர்யாவை மறந்துவிட்டு, பிரியாவை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்பாகவே, கடந்த ஏப்ரல் மாதம், சௌந்தர்யா மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட இருவரும் சேர்ந்து, சுமுகமாக பேசி, தங்களுடைய காதல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர்.
அதே சமயம், சௌந்தர்யாவால் பார்த்திபனை மறக்க முடியாமல், தன்னுடைய தாயிடம் பார்த்திபனைத் தவிர்த்து வேறு யாரையும், திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று அழுது புலம்பி இருக்கிறார்.
அத்துடன், காதலனான பார்த்திபனை மறக்க முடியாமல், அவருடைய நினைவிலேயே இருந்த சௌந்தர்யா, பார்த்திபனை கடத்திச் சென்றாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். ஆகவே, தன்னுடைய குடும்பத்துடன் ஒன்றிணைந்து, பார்த்திபனை கடத்த திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, ரமேஷ் என்ற தன்னுடைய மாமன் மகன் மற்றும் கார் ஓட்டுனரான சித்தப்பா சிவகுமார் போன்றவருடன் சேர்ந்து, பார்த்திபனை கடத்த சௌந்தர்யா திட்டமிட்டுள்ளார். இதற்கு அவருடைய தாயாரும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான், நேற்று வழக்கம்போல பார்த்திபன் வீட்டில் இருந்து புறப்பட தயாரானார். பின்னர் வீட்டிலிருந்து புறப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தபோது, அந்த பகுதியில் காரில் வந்த ஒரு மர்ம கும்பல் பார்த்திபனை வலுக்கட்டாயமாக ஒரு காரில் கடத்திச் சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தாய் ஆஷா, அந்த காரை மறித்து நிறுத்த முயற்சி செய்தார். ஆனாலும், அவர் மீது மோதி விட்டு, அந்த கார் சென்று விட்டது.
உடனடியாக, பார்த்திபனின் மனைவி பிரியா இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் பார்த்திபனின் செல்போன் எண் போன்றவற்றை வைத்து விசாரணை நடத்தியதில். பார்த்திபன் காஞ்சிபுரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரம் தெரிய வந்தது.
உடனடியாக, அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர், காஞ்சிபுரம் பகுதியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த பார்த்திபனை பத்திரமாக மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட, நான்கு பேரை அதிரடியாக கைது செய்து, விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளியாகி இருக்கிறது.
அத்துடன், கடத்திச் சென்ற பார்த்திபனை காஞ்சிபுரத்தில் இருக்கின்ற ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, கத்தி முனையில் அவரை மிரட்டி, சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால், விசாரணைக்கு பின்னர் சௌந்தர்யா அவருடைய தாயாரான உமா மற்றும் உறவினர்களான ரமேஷ், சிவகுமார் உள்ளிட்ட நான்கு பேரும், கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு நடுவே, தற்போது பார்த்திபனை விட்டு, சௌந்தர்யா பிரிந்து சென்று விடுவதாக தெரிவித்து இருப்பதால், வேளச்சேரி காவல்துறையினர், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக, உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.