சென்னையில் மது அருந்தும்போது வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரி என்கின்ற 40 வயதான நபருக்கு திருமணமாகி பார்வதி என்கின்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சென்னை, புளியந்தோப்பு, வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்த இவர் புளியந்தோப்பு பகுதியில் வட்டிக்கு விடும் தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில் புளியந்தோப்பு, பேசன் பிரிட்ஜ், கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தம் 29 வழக்குகள் இவரின் பெயரில் உள்ளன. அக்டோபர் 20 ஆம் தேதியன்று இரவு மாரி மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி பகுதியில் உள்ள கால்வாய் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
நேரம் செல்ல, செல்ல போதை தலைக்கு ஏறியதும் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், நண்பர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நண்பர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாரியை சரமாரியாக வெட்டினார்.
இதனைத் தொடர்ந்து, மாரியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, அங்கிருந்த 5 பேரும் தப்பி ஓடினர்.
பின்னர், புகாரின்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் மாரியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைப் பெற்று வந்த மாரி நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, காவல் துறையினர் கொருக்குப்பேட்டை மாரி உள்பட அவரது நண்பர்கள் ஐந்து பேரைத் தேடி வருகின்றனர்.