சென்னை மாநகர பகுதியில் எழும்பூரில் தாய் சேய் நல மருத்துவமனையில் சந்தியா என்ற 23 வயது பெண் மகப்பேறுக்காக அனுமதி பெற்றார். இந்த நிலையில் சென்ற வாரம் குழந்தை பிறந்ததை தொடர்ந்து தாய் சேய் இருவருமே மருத்துவமனையில் உள்ளே மருத்துவரின் கண்காணிப்பிலே இருந்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை நேரத்தில் 3 மணியளவில் தனது குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தாய் மட்டும் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.தப்பி சென்ற நிலையில் திருவள்ளூர் பகுதியில் இருக்கும் இரயில் தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்த போது , எதிர்பாரத விதமாக இரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரயில் தண்டவாளத்தில் ஏதோ ஒரு பெண் இரயிலில் அடிபட்டு இறந்ததாக காவல்துறைக்கு தகவலின் கிடைத்ததன் பேரில், இரயில்வே காவல் துறையினர் விசாரணை செய்து வந்துள்ளனர். இதனிடையே, மருத்துவமனையில் இருந்த சந்தியா என்ற பெண் மாயமானதை தொடர்ந்து தகவலை அறிந்த மருத்துவர்கள், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இதனையடுத்து நடந்த விசாரணையில், மருத்துவமனையில் மாயமான சந்தியா தான் இரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் பெண்ணின் உடலை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.