குழந்தை இல்லை என்ற கோபத்தில் மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு, காவல்துறையினரை குழப்புவதற்காக கோடாரியை காட்டுப் பகுதியில் எறிந்து விட்டு, மனைவியின் உடல் அருகே படுத்து உறங்கிய கணவனால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் இருக்கின்ற ஜோப்னோ கிராமத்தைச் சேர்ந்தவர் டார்மா முண்டா. இவர் தன்னுடைய மனைவியை சிலர் கொலை செய்து விட்டதாக நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். ஆகவே கொலை செய்யப்பட்ட அவருடைய மனைவியான பீரங் தேவி உடலை கைப்பற்றி, காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி உண்மைகள் தெரிய வந்தது. அதாவது,டார்மா முண்டாவே தன்னுடைய மனைவியை கொலை செய்திருக்கிறார் என்பது காவல்துறையினரின் விசாரணையில், தெரியவந்து. அவர்கள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், அவர், தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டார்.
பின்னர் அதற்கு விளக்கம் அளித்த டார்மா, திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன பின்னரும், எங்களுக்கு குழந்தை இல்லை. ஆகவே, அவரால் குழந்தை பெற்றுத் தர இயலாததால், வேறு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன் என்றும், அதற்கு தடையாக இருந்ததால், மனைவியை கொலை செய்ய முயற்சி செய்தேன் என்றும் கூறினார்.
மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவியின் முதுகுத்தண்டில் கோடாரியால் வெட்டி உள்ளார். இதில் அவருடைய மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதன் பிறகு காட்டுப் பகுதிக்கு சென்று, கோடாரியை வீசிவிட்டு வந்து, மீண்டும் மனைவியின் உடல் அருகே படுத்துக் கொண்டார். அதோடு, காவல்துறையினரை குழப்புவதற்காகவே அவர் இப்படி செய்தார் என்றும், சொல்லப்படுகிறது. மேலும் மனைவியை மாந்திரீகம் செய்வதாக கூறி, சிலர் கொலை செய்து விட்டதாக பொய் கூறினேன் என்றும் காவல்துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பீரங் தேவியை கொலை செய்ய அவருடைய கணவரால், பயன்படுத்தப்பட்ட, கோடாரியை காட்டுப்பகுதியில் இருந்து, காவல்துறையினர் நேற்று கைப்பற்றி இருக்கின்றனர். அதோடு, டார்மாவையும் கைது செய்தனர்.