முந்தைய காலங்களில் ஆண் பிள்ளைகளே பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற தயங்குவார்கள். ஆனால் தற்போது இருக்கின்ற இந்த நவீன காலத்தில் பெண் பிள்ளைகள் கூட பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற துணிந்து விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கிராமத்தைச் சார்ந்த 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் சென்ற நவம்பர் மாதம் 21ஆம் தேதி திடீரென்று வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். மேலும் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை 60,000 ரூபாய் பணம் மற்றும் கைபேசி உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு பெற்றோர்களுக்கு தெரியாமல் அந்த மாணவி திடீரென்று வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
திடீரென்று தன்னுடைய மகள் காணாமல் போனதால் மாணவியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். வீட்டிலிருந்து காணாமல் போன சிறுமியின் கைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், அவர் இறுதியாக யாருடன் உரையாடினார் என்ற விவரங்களை காவல்துறையினர் சேகரித்திருக்கிறார்கள். அதில் ஒரு கைபேசி எண் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து இயங்கி வருவது காவல்துறையினரின் விசாரணையின் மூலமாக தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், அந்த பகுதியில் இருந்த பங்களா வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். அந்த சமயத்தில் வீட்டிலிருந்து காணாமல் போன பள்ளி மாணவியும், ஒரு வாலிபரும் தனிமையில் இருந்த நிலையில், இருவரையும் பிடித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் வைக்கல் மேடு என்ற பகுதியை சேர்ந்த வச்சி பிரபு(22) என்ற விவரம் தெரிய வந்தது. இருசக்கர வாகன மெக்கானிக்கான இவருக்கும், பள்ளி மாணவிக்கும் இன்ஸ்டாகிராமின் மூலமாக தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. பள்ளி மாணவிக்கும், பைக் மெக்கானிக் பிரபுவுக்கும் தாயார் இல்லாத நிலையில் இருவரும் உணர்ச்சிப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில், இந்த தொடர்பு நாளடைவில் காதலாக உருமாறி இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து 2 பேரும் அவ்வப்போது கன்னியாகுமரியில் சந்தித்து கணவன், மனைவியை போன்று தனிமையில் இருந்து வந்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வருகை தந்த பிரபு, மாணவிக்கு செல்போனில் அழைத்து வீட்டில் இருந்து பணம் மற்றும் நகையுடன் வந்துவிட்டால் இருவரும் எங்காவது சென்று குடும்பம் நடத்திக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகள் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவியின் வீட்டிலிருந்த 5 சவரன் நகை 60,000 ரூபாய் ரொக்க பணத்தையும் எடுத்துக் கொண்டு கன்னியாகுமரிக்கு பயணமாகி உள்ளார்.
கன்னியாகுமரியில் பிரபு மற்றும் அந்த பள்ளி மாணவி உள்ளிட்ட இருவரும் தனி அறை எடுத்து தங்கிய நிலையில், அடுத்த நாள் திருப்பூருக்கு சென்று அவர்களுடைய நண்பர்களின் உதவியுடன் நகைகளை அடகு வைத்து, சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு சென்று, அந்த பகுதியில் இருக்கின்ற கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு அந்தப் பகுதியிலேயே ஒரு பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து பின்பு இருவரும் குடித்தனம் நடத்தி உள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து பிரபுவை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த 15,000 ரூபாய் ரொக்கம் மற்றும் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டதுடன், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பிரபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.