மது அருந்துவதில் ஏற்பட்ட சண்டையில், பெயிண்டர் வீடு புகுந்து, வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் அடுத்து இருக்கும், கீழக்குமரேசபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சரவணன் (48), இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், சமுத்திரவள்ளி தன்னுடைய இளைய மகளை அழைத்துக் கொண்டு, சென்னையில், செவிலியராக வேலை பார்க்கும், தன்னுடைய மற்றொரு மகளை பார்ப்பதற்காக சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக சென்றார்.
வீட்டில் யாரும் இல்லாததால், லால்குடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், நேற்று இரவு சரவணனின் வீட்டிற்கு மது வாங்கி வந்து, சரவணனுக்கும் குடுத்து குடிக்க வைத்திருக்கிறார். அப்படி இருவரும் குடித்ததில், இருவருக்கிடையில், பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட ராதாகிருஷ்ணன், சரவணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.
இந்த படுகொலை சம்பவம், திருவெறும்பூர் காவல்துறையினருக்கு கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சரவணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
காவல்துறையினர் ஒருபுறம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், இன்று காலை சரவணனை சரமாரியாக, வெட்டி கொலை செய்த ராதாகிருஷ்ணன், திருவெறும்பூர் காவல்துறையிடம் சரணடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.