தமிழகத்தில் ரேஷன் விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையாக விளங்கும் ரேசன் கடைகளின் நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமிபத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் ஆர்வமுள்ள மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கு எரிபொருள் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறி இருந்தார். ரேஷன் கடைகள் மூலம் நிதி சேவைகள் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக நிதி சேவைத்துறை அதிகாரி கூறி இருந்தார்.
மகாராஷ்ட்ரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரேஷன் விலைக்கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பொது விநியோக முறை கட்டுப்பாட்டு ஆணை 2015ன் கீழ், ரேஷன் கடைகளுக்கு உரிமங்கள் வழங்கப்படுகின்றன. உணவுப் பொருட்கள் தவிர்த்த இதர பொருட்களை விற்க இந்தக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.