டாஸ்மாக் ஊழல் வழக்கில் ED-க்கு எதிராக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகியதை அடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால், வழக்கை தள்ளிவைக்க வேணடும்,” என கோரிக்கை வைக்கபட்டது.
அப்போது நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு வந்தபோதே உச்ச நீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால், வழக்கை நாங்கள் பட்டியிலிட்டிருக்க மாட்டோம். இதன் மூலம் நீங்கள் நீதிமன்றத்தை இழிவுபடுத்திவிட்டீர்கள். குறைந்தபட்சம் நீதிமன்றத்துக்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு இன்று தீர்ப்பானது வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.