சென்னை அருகே, கடனாக கொடுத்த ஐயாயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டதால், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
சென்னை அருகே உள்ள திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (60) என்பவர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சென்ற சில மாதங்களுக்கு முன்னர், 5000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான், ராஜன் 5000 ரூபாய் பணத்திற்கு பதிலாக வெறும் ஆயிரம் ரூபாய் பணத்தைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பி கொடுத்துள்ளார்.
இந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட வெங்கடேசன், பலமுறை மீதி பணத்தை கேட்டிருக்கிறார். ஆனால், தொடர்ந்து, ராஜன் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட வெங்கடேசன், ராஜனை கண்டபடி வசை பாடி உள்ளார். ஆகவே, இருவருக்கும் இடையில், வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது.
இந்த நிலையில் தான், செல்போன் மூலமாக ராஜன் வெங்கடேசனை தொடர்பு கொண்டு, கார்கில் நகருக்கு வந்து, உங்களுக்கு தேவைப்படும் பணத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று அழைத்துள்ளார். அங்கு சென்ற வெங்கடேசனை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு, ராஜன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த தாக்குதலில், கீழே சரிந்து விழுந்த வெங்கடேசனை, அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். ஆகவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்