திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள தெக்கலூரில் சாலையோரம் பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் தேக்களூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த பாகுல் என்பவரது மனைவி சுகன்யா (32) என்பது தெரியவந்தது.
சுகன்யாவின் முதல் கணவர் இறந்ததையடுத்து, மறுமணம் செய்து மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து பாகுலுடன் வசித்து வந்தார்.ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு மாதங்களுக்கு முன், பாகுலை விட்டு பிரிந்தார். இரண்டாவது கணவரைப் பிரிந்த சுகன்யாவுக்கும், கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்த சரவணகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக அவருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நேரத்தில் சரவணக்குமார் பாகுலிடம் குடிபோதையில் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். உன்னுடைய மனைவி விஷம் குடித்து விட்டாலோ இல்லையெனில் யாரோ கொன்று விட்டார்களோ தெரியவில்லை. ஆனால் அவளின் பிரேதம் தெக்கலூரில் உள்ள ஒரு குப்பை மேட்டில் கிடக்கிறது, போய் எடுத்துக் கொள், என்று சொல்லியுள்ளார்.
இந்த கொலை குறித்து பாகுல் அவினாசி போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்ததையடுத்து, போலீசார் விரைந்து வந்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரவணகுமாரை தேடி வருகின்றனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட புட்டர் இஞ்ச் எனப்படும் இரும்பு கருவியை சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.