தென்காசி அருகே பயன்பாடற்ற கிணற்றில் கொலை செய்து வீசப்பட்ட இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள வலசை கிராமம் அருகே, சேர்ந்தமரம் சாலையில், கண்டமான் குளம் என்ற குளத்துக்கரை அருகே பயன்படுத்தப்படாத ஒரு பழமையான கிணறு இருக்கிறது.
இந்த நிலையில், வேலைக்காக அந்த கிணறு இருக்கும் பகுதி வழியாக, பெண்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அதன் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த கிணற்றில் சாக்கு மூட்டை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில், ஒரு சடலம் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன் கிணற்றுக்குள் வீசப்பட்ட மூட்டையை வெளியே எடுத்தனர். அதை பிரித்துப் பார்த்தபோது, அதில் இளம் பெண் ஒருவரின் சடலம் இருந்ததைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அந்த இளம் பெண் கொலை செய்யப்பட்டு, சாக்கு முட்டைக்குள் கட்டப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டு, நான்கு நாட்கள் ஆன நிலையில், அழுகிப்போய் இருந்தது அந்த பெண்ணின் சடலம். ஆகவே, உடலை கைப்பற்றி, தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் தலைமையிலான காவல்துறையினர், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு, நிர்வாணமாக, சாக்கு முட்டையில், கிடந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.