காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து பணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் டிஜிபியாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாக பிரிவில் இருந்த வெங்கடராமனை தமிழக அரசு நியமித்தது. இதற்கு தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு. மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. சங்கர் ஜிவால் அவர்களைக் காவல்துறை தலைவராக நியமிக்கும் போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும்.
ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.
காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.