தமிழ் மாதங்களில் ஒன்றான புரட்டாசியில், பல குடும்பங்களில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை மட்டுமே உண்பதும், விரதமிருந்து வழிபாடுகளில் ஈடுபடுவதும் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். இதற்குப் பின்னால் ஆன்மீக நம்பிக்கைகள் மட்டுமன்றி, அறிவியல் சார்ந்த உடல்நலக் காரணங்களும் அடங்கியுள்ளன.
அறிவியல் காரணம்: புரட்டாசி மாதம் என்பது வெயில் காலம் முடிந்து, மழைக்காலம் தொடங்கும் ஒரு இடைப்பட்ட பருவக்காலமாகும். கோடை காலத்தில் பூமியில் தேங்கியிருந்த வெப்பம், மழைத் துளிகள் விழும்போது வெளியில் வரத் தொடங்கும். இதனால் வளிமண்டலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இத்தகைய காலநிலை மாற்றத்தின்போது மனித உடலில் இயல்பாகவே வெப்பம் அதிகரிக்கும். அந்நேரத்தில் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும் அசைவ உணவுகளை உட்கொண்டால், உடல் சூடு மேலும் அதிகரித்து வயிறு சார்ந்த கோளாறுகள், தோலில் வறட்சி, அதிக வியர்வை மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும்.
பருவகால மாற்றத்தின்போது உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைய வாய்ப்புள்ளதால், எளிய முறையில் செரிமானமாகும் சைவ உணவுகளையும், உடலைக் குளிர்விக்கும் துளசி தீர்த்தத்தையும் உட்கொள்வது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
ஆன்மீகக் காரணம்: ஜோதிடக் கணக்கீட்டின்படி, கன்னி ராசிக்கு உரிய மாதமாகப் புரட்டாசி கருதப்படுகிறது. கன்னி ராசியின் அதிபதியான புதன் பகவான், மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். புதன் கிரகம் சைவ உணவோடு தொடர்புடையதாகக் கருதப்படுவதால், அவருக்குரிய இந்த மாதத்தில் அசைவத்தைத் தவிர்த்து, பெருமாளுக்கு உகந்த துளசி தீர்த்தத்துடன் விரதமிருந்து வழிபடுவது சிறப்பு என்ற நம்பிக்கை நிலவுகிறது.
நம் முன்னோர்கள் மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டே, பருவகால மாற்றத்திற்கு ஏற்ப உணவுக் கட்டுப்பாடுகளையும் ஆன்மீக வழிபாட்டு முறைகளையும் இணைத்துப் பழக்கப்படுத்தியுள்ளனர். இத்தகைய முறைகளைப் பின்பற்றுவது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை அளிக்கும்.



