ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி ஊராட்சி, போத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் காளநாயக்கர் (71). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவருக்கும் இடையே பூர்வீக நிலம் தொடர்பான எல்லைப் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில், ரங்கசாமி தனது விவசாய நிலத்தை உழுவதற்காக டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காளநாயக்கர், நிலத்திற்குள் செல்ல விடாமல் டிராக்டரின் முன்பாக நின்று வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி, டிராக்டரை நிறுத்தாமல் வேகமாக இயக்கி காளநாயக்கர் மீது மோதியதாக தெரிகிறது.
டிராக்டர் பலமாக மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட முதியவர் காளநாயக்கர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ரங்கசாமி, உடனடியாக டிராக்டரை எடுத்துச் சென்று தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானி டி.எஸ்.பி சீதாலட்சுமி தலைமையிலான காவல்துறையினர், உயிரிழந்த காளநாயக்கரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ரங்கசாமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வயல்வெளியிலேயே முதியவர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



